முத்திநிந்தை

2558
பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1
2559
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
தாடவல் லாரவர் பேறெது வாமே. 2
2560
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3
2561
திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. 4
2562
தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. 5
2563
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னிகி லாரே. 6
2564
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறுவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே. 7
2565
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8