வெளி வேஷம்

bookmark

கிராமத்துப் பெரிய மனிதர்கள்தான் சாதிப் பிரிவினையின் பாதுகாவலர்கள். உழைப்பவர்களிடையே சாதிப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் நீடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது நிலச் சுரண்டல் நீடிக்க அந்நிலைமைகள் அவசியம். கீழ்சாதிக்குள் கலப்புமணம் என்றால் சீறுவார்கள். சாதி பிரிவுகளுக்குள் காதல் என்றால் குமுறுவார்கள். மேல் சாதிப் பெண்ணோடு காதல் கொண்டு, மணந்து கொள்ள முயன்றவர்களைக் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். செவந்தி பெருமாள், தடிவீரன் போன்ற கீழ்சாதி ஆடவர்கள் வன்னியர், மறவர் போன்ற உயர்சாதிப் பெண்களோடு காதலுறவு கொண்ட காரணத்தால், நாயக்க மன்னரது மண்டலாதிபனான வடமலையப்ப பிள்ளையன் என்பவரால் கொல்லப்பட்டனர்.மதுரைவீரன், நாட்டுக்கு நற்பணி செய்திருப்பினும், அரசனது ஆசை நாயகி வெள்ளையம்மாளிடம் காதல் கொண்ட குற்றத்தால் கைகால்கள் துண்டிக்கப் பட்டு உயிரிழந்தான். இவ்வளவு கண்டிப்பாக கீழ்ச்சாதியினரின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பெரிய மனிதர்களின் ஒழுக்கமோ என்றால் !..... வேஷம். வெளி வேஷம்தான்.

சம்பிரதி என்பது நாயக்கர் காலத்தில் பெரிய பதவி, அப்பதவி வகித்தவர் மகன் காட்டுச் சாதிப் பெண்ணை வைப்பாட்டியாகக் கொண்டுவந்து விட்டானாம் ! அதை எள்ளி நகையாடுகிறார்கள் கிராம மக்கள்.

சைவன் சைவந்தான்
சம்பிரிதி பிள்ளை மகன்
கோம்ப மலை உத்திரத்தி
கொண்டு வந்து சேத்தாரே.

வட்டார வழக்கு : உத்திரத்தி-வட திசையில் பிறந்தவள்.
குறிப்பு : கோம்பை, சிவகிரிக்கு வடக்கே உள்ளது.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------