வெள்ளையர் கொள்ளை

bookmark

கரும்பை விளைவிக்கும் விவசாயிகளிடம், வெள்ளையர் குறைந்த விலைக்கு கரும்பை வாங்கிக் கொண்டு போனார்கள். அவற்றையெல்லாம் கப்பலில் ஏற்றினார்கள். கடற்கரை வழியே தங்கள் ஆலைகளுக்குக் கொண்டு சென்றார்கள். கரும்பு விற்ற விவசாயி கூழ் குடித்துக் கொண்டு வாழ கரும்பை வாங்கிச் சென்ற வெள்ளையன் முப்பது முட்டையும் தின்று சாராயமும் குடிக்கிறானாம். அவனுக்கு பணம் சேர்ந்த விதம் விவசாயிக்குத் தெரியவில்லை. அரசியல் அறிவு பரவாத கிராமத்தில் வாழும் விவசாயி ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையை எப்படி அறிவான்? தங்களை வெள்ளையன் வஞ்சிக்கிறான் என்பது மட்டும் மங்கலாகத் தென்பட்டது. அதனால் ஏற்பட்ட வெறுப்பினால் வெள்ளையனை துரை என்று சொல்லாமல் ` பரங்கி ` என்று சொல்லுகிறான்.

ஒரு கட்டுக் கரும்பாம்-பரங்கி
ஒண்ணால் ஆயிரமாம்
அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி
ஏத்தனாங் கப்பலுக்கு
கப்பலு முக்காதம்-பரங்கி
கடலு முக்காதம்
கப்பலில் இறக்கும் தண்ணியைக் குடிச்சா
தலை கிறு கிறுண்ணும்
முப்பது கோழி முட்டை-பரங்கி
முன்னூறு சாராயம்
எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு
வெத்திலை திண்ணாப் போல
ரண்டு கட்டுக் கரும்பாம்-பரங்கி
ரண்டால் ஆயிரமாம்
அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி
ஏத்தனாங் கப்பலுக்கு
கப்பலு முக்காதம்-பரங்கி
கடலு முக்காதம்
கப்பலிலிருக்கும் தண்ணிய குடிச்சா
தலை கிறுகிறுண்ணும்
முப்பது கோழி முட்டை-பரங்கி
முன்னூறு சாராயம்
எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு
வெத்திலை திண்ணாப் போல

வட்டார வழக்கு: ஏத்தனான்-ஏற்றினான் ; வெத்திலை-வெற்றிலை.
சேகரித்தவர் : s.s சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------