திருக்கழுமலம்

பண் - மேகராகக்குறிஞ்சி
1383
சேவுயருந் திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே.
1.129.1
1384
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே.
1.129.2
1385
அலங்கல்மலி வானவருந் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே.
1.129.3
1386
பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே.
1.129.4
1387
ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே.
1.129.5
1388
தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே.
1.129.6
1389
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே.
1.129.7
1390
அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே.
1.129.8
1391
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே.
1.129.9
1392
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
மேல்படுக்குங் கழுமலமே.
1.129.10
1393
கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.
1.129.11
திருச்சிற்றம்பலம்