திருவீழிமிழலை

bookmark

பண் - மேகராகக்குறிஞ்சி

1416

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்

கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்

நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்

பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்

பொருள்சொல்லும் மிழலையாமே.

1.132.1

1417

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்

தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட

கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு

மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்

வீற்றிருக்கும் மிழலையாமே.

1.132.2

1418

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்

புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்

சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்

முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்

வாய்காட்டும் மிழலையாமே.

1.132.3

1419

உரைசேரும் எண்பத்து நான்குநூ

றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்

அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல

நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்

கையேற்கும் மிழலையாமே.

1.132.4

1420

காணுமா றரியபெரு மானாகிக்

காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம்

படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை

உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப

போலோங்கு மிழலையாமே.

1.132.5

1421

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்

றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்

துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்

கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட

மணஞ்செய்யும் மிழலையாமே.

1.132.6

1422

ஆறாடு சடைமுடியன் அனலாடு

மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்

குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி

மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற்

பண்பாடும் மிழலையாமே.

1.132.7

1423

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்

கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்

நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த

சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி

விமானஞ்சேர் மிழலையாமே.

1.132.8

1424

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்

ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த

வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி

நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்

சேருமூர் மிழலையாமே.

1.132.9

1425

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்

சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்

கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்

பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ

டும்மிழியும் மிழலையாமே.

1.132.10

1426

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி

மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்

செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்

பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்

ஈசனெனும் இயல்பினோரே.

1.132.11

 

திருச்சிற்றம்பலம்