திருப்பராய்த்துறை

bookmark

பண் - மேகராகக்குறிஞ்சி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை.

1448

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.

1.135.1

1449

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

1.135.2

1450

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

1.135.3

1451

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.

1.135.4

1452

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.

1.135.5

1453

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.

1.135.6

1454

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.

1.135.7

1455

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.

1.135.8

1456

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.

1.135.9

1457

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.

1.135.10

1458

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

1.135.11

 

திருச்சிற்றம்பலம்