திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

bookmark

பண் - குறிஞ்சி

1025

தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே.

1.95.1

1026

கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.

1.95.2

1027

எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.

1.95.3

1028

விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.

1.95.4

1029

பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.

1.95.5

1030

கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.

1.95.6

1031

பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.

1.95.7

1032

எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.

1.95.8

1033

இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.

1.95.9

1034

நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.

1.95.10

1035

கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.

1.95.11

 

திருச்சிற்றம்பலம்