நல்லோர் - 1

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
---------