திருச்சிரபுரம்

bookmark

பண் - நட்டராகம்

1103    

அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
  அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
  வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
  சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
  வினையொடும் பொருந்தாரே.    

01

1104    

கோல மாகரி உரித்தவர் அரவொடும்
  ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
  சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
  பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
  தொழவினை நில்லாவே.    

02

1105    

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
  தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
  கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
  சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
  குற்றங்கள் குறுகாவே.    

03

1106    

மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
  காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
  பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
  சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
  கருவினை யடையாவே.    

04

1107    

பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
  பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
  தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
  செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
  அடியவர் வருந்தாரே.    

05

1108    

ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
  வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
  அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
  இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
  வல்வினை அடையாவே.    

06

1109    

பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
  பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
  ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
  தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
  தொழுமவர் தளராரே.    

07

1110    

இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
  எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
  நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
  றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
  தெழவினை குறுகாவே.    

08

1111    

வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
  மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
  கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
  பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
  வினையவை கூடாவே.    

09

1112    

பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
  பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
  தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
  மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
  விட்டிடும் மிகத்தானே.    

10

1113    

பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
  பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
  நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
  விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
  பரமனைப் பணிவாரே.    

11

திருச்சிற்றம்பலம்