திருக்கடிக்குளம்

bookmark

பண் - நட்டராகம்

1125    

பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
  புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
  குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
  துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
  முன்வினை மூடாவே.    

01

1126    

விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
  விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்
  வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
  துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
  பழியிலர் புகழாமே.    

02

1127    

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
  புலியதள் அழல்நாகந்
தங்க மங்கையைப் பாகம துடையவர்
  தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
  துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
  இடும்பைவந் தடையாவே.    

03

1128    

நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
  தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை
  பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
  துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
  தேய்வது திணமாமே.    

04

1129    

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
  துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
  கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்
  துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்
  விதியுடை யவர்தாமே.    

05

1130    

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
  டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
  புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
  துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
  பற்றறக் கெடுமன்றே.    

06

1131    

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
  குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
  பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
  துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
  நிற்ககில் லாதானே.    

07

1132    

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்
  மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
  இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
  கடிக்குளந் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
  குணமுடை யவர்தாமே.    

08

1133    

நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
  நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
  பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்
  துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத்
  தீவினை யடையாவே.    

09

1134    

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
  குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
  கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
  துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
  தூநெறி எளிதாமே.    

10

1135    

தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்
  மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
  மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய
  கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்
  இறைவனோ டுறைவாரே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கற்பகநாதர் , தேவி-சௌந்தரநாயகி 

திருச்சிற்றம்பலம்