திருக்கீழ்வேளூர்

bookmark

பண் - நட்டராகம்

1136    

மின்னு லாவிய சடையினர் விடையினர்
  மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறைஒலி நாவினர்
  கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
  புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
  யோடிட வீடாமே.    

01

1137    

நீரு லாவிய சடையிடை யரவொடு
  மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
  மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம்
  எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
  பிணியொடு வினைபோமே.    

02

1138    

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
  வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
  பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
  கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
  உலகினில் உள்ளாரே.    

03

1139    

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
  தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளும் நாதனார்
  நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
  கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
  நிலைமிகப் பெறுவாரே.    

04

1140    

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
  வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
  மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
  நிமலனை நினைவோடுஞ்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
  தேய்வது திணமாமே.    

05

1141    

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
  கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
  தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
  பெருந்திருக் கோயில்மன்னும்
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
  முடுகிய இடர்போமே.    

06

1142    

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
  வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
  காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
  பெருந்திருக் கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
  நினைபவர் வினைபோமே.    

07

1143    

மலைநி லாவிய மைந்தனம் மலையினை
  யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
  உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
  பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
  நினையவல் வினைபோமே.    

08

1144    

மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
  மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
  பாகனைப் பரிவோடுஞ்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
  மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
  நடலைகள் நணுகாவே.    

09

1145    

சீறு லாவிய தலையினர் நிலையிலா
  அமணர்கள் சீவரத்தார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
  சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
  பெருந்திருக் கோயில்மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
  பேணுமின் தவமாமே.    

10

1146    

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
  அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
  கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
  புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
  பெறுவது திடமாமே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்