திருவலஞ்சுழி

bookmark

பண் - நட்டராகம்

1147    

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
  யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
  முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
  வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
  வழிபடும் அதனாலே.    

01

1148    

விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
  விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
  இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
  வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
  டினிதிருந் தமையாலே.    

02

1149    

திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
  விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
  மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
  வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய
  இணையடித் தலந்தானே.    

03

1150    

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
  அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
  தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
  யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
  அற்புதம் அறியோமே.    

04

1151    

மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
  எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
  பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
  பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
  இணையடி தொழுவாரே.    

05

1152    

ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
  மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
  பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
  தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
  வரிவளை கவர்ந்தாரே.    

06

1153    

குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
  குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
  இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
  வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
  சேயிழை தளர்வாமே.    

07

1154    

குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
  குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
  தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
  வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
  அல்லவர் காணாரே.    

08

1155    

அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
  அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
  மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
  வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
  துன்பங்கள் களைவாரே.    

09

1156    

அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
  தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
  தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
  மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
  அளவறுப் பொண்ணாதே.    

10

1157    

மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
  மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
  நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
  கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
  வருத்தம்வந் தடையாவே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் -கபர்த்தீசுவரர் , தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்