திருவிற்குடிவீரட்டானம்

bookmark

பண் - நட்டராகம்

1169     

வடிகொள் மேனியர் வானமா மதியினர்
  நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
  உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
  விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
  அருவினை யடையாவே.    

01

1170    

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
  கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
  பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
  விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
  வருத்தம தறியாரே.    

02

1171    

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
  மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
  தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
  விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
  பேணுவ ருலகத்தே.    

03

1172    

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
  பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
  கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம்
  விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி
  தீவினை கெடுமாறே.    

04

1173    

கடிய ஏற்றினர் கனலன மேனியர்
  அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
  தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
  விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
  பற்றறும் அருநோயே.    

05

1174    

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
  கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
  அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
  விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
  கிடர்கள்வந் தடையாவே.    

06

(இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று).    

07

1175    

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
  யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
  பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
  விற்குடி வீரட்டந்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
  துன்பநோ யடையாவே.    

08

1176    

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
  திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
  யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
  விற்குடி வீரட்டந்
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
  தவமல்கு குணத்தாரே.    

09

1177    

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
  ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
  பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
  விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே.    

10

1178    

விலங்க லேசிலை யிடமென வுடையவன்
  விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
  யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
  பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
  மற்றது வரமாமே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலி

திருச்சிற்றம்பலம்