திருக்கோட்டூர்

bookmark

பண் - நட்டராகம்

1179    

நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
  கண்ணனே ஒற்றைவிடைச்
சூல மார்தரு கையனே துன்றுபைம்
  பொழில்கள்சூழ்ந் தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்
  தாங்குவர் பாங்காலே.    

01

1180    

பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு
  மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
  மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
  அருள்பெறல் எளிதாமே.    

02

1181    

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
  அடியவர் தமக்கெல்லாஞ்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
  செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
  டமர்ந்தினி திருப்பாரே.    

03

1182    

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
  மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
  அன்னஞ்சேர்ந் தழகாய
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
  நீடிய புகழாரே.    

04

1183    

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
  அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
  பத்திசெய் தெத்திசையுங்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
  அவனருள் பெறலாமே.    

05

1184    

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
  துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
  புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
  ஏதம்வந் தடையாவே.    

06

1185    

மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
  மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
  பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
  கெழுவுவர் புகழாலே.    

07

1186    

ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
  யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
  நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
  கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
  தவமுடை யவர்தாமே.    

08

1187    

பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்
  முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத்
  திருவினைத் தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
  கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
  நிகழ்தரு புகழாரே.    

09

1188    

கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
  கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
  மெய்யன்நல் லருளென்றுங்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
  டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
  பெருமையைப் பெறுவாரே.    

10

1189    

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
  பாவையோ டுருவாருங்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
  கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
  பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
  தாங்குவர் புகழாலே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவை.

திருச்சிற்றம்பலம்