திருமாந்துறை

bookmark

பண் - நட்டராகம்

1190    

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
  செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
  குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
  லேத்துதல் செய்வோமே.    

01

1191    

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
  வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
  மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
  சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
  யன்றிமற் றறியோமே.    

02

1192    

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
  கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
  வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
  கெழுமுதல் அறியோமே.    

03

1193    

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
  இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
  ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
  வணங்குதல் அறியோமே.    

04

1194    

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
  குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
  பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
  தலைப்படுந் தவத்தோரே.    

05

1195    

பெருகு சந்தனங் காரகில் பீலியும்
  பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
  புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
  பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
  வணங்குதல் செய்வோமே.    

06

1196    

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
  நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
  மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
  அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
  நிரைகழல் பணிவோமே.    

07

1197    

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
  மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
  நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
  தீநெறி யதுதானே.    

08

1198    

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
  நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
  மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
  மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
  கூற்றுவன் நலியானே.    

09

1199    

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
  நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
  நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
  மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
  அதுவவர்க் கிடமாமே.    

10

1200    

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
  மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
  செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
  பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
  பாவமும் இலர்தாமே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் -ஆம்ரவனேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்