திருஅழுந்தூர்

பண் - இந்தளம்
208
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
01
209
கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே.
02
210
கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
03
211
வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே.
04
212
அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.
05
213
நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே.
06
214
தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே.
07
215
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.
08
216
மணீநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன் னியிருந் தனையே.
09
217
முடியார் சடையாய் முனநா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியாற் றொழமா மடம்பற் றினையே.
10
218
அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் -சௌந்தர நாயகி .
திருச்சிற்றம்பலம்