திருஆமாத்தூர்

பண் - சீகாமரம்
535
குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.
01
536
பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து *பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.
02
(* பம்பை என்பது ஒரு நதி).
537
நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
பூண்ட கேழல்ம ருப்பரா விரி கொன்றை வாளரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.
03
538
சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
04
539
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.
05
540
ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
06
541
மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
07
542
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதர
அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
08
543
செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சைத யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
09
544
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
10
545
வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
11
.
திருச்சிற்றம்பலம்