திருக்கோட்டாறு

bookmark

பண் - சீகாமரம்

557    

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே.    

01

558    

நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழ லேத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.    

02

559    

விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.    

03

560    

அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலந் திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.    

04

561    

பழைய தம்மடி யார்துதி செயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த ஆடிய
அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.    

05

562    

பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேமணி மிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.    

06

563    கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவ மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.    

07

564    

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.    

08

565    

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாதும் நீயும்வி யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.    

09

566    

உடையி லாதுலழ் கின்ற குண்டரும் ஊணருந் தவத் தாய சாக்கியர்
கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே.    

10

567    

கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன் றிலாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராவதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலி 
                   

திருச்சிற்றம்பலம்