திருப்புறவார் - பனங்காட்டூர்

பண் - சீகாமரம்
568
விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.
01
569
நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.
02
570
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.
03
571
மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.
04
572
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.
05
573
நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.
06
574
கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையோர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.
07
575
தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.
08
576
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
09
577
நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.
10
578
மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - சத்யாம்பிகை .
திருச்சிற்றம்பலம்