சீகாழி

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

1038    

பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.    

01

1039    

தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.    

02

1040    

கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.    

03

1041    

சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.    

04

1042    

மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.    

05

1043    

நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.    

06

1044    

நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.    

07

1045    

கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.    

08

1046    

மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.    

09

1047    

புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.    

10

1048    

ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு
---- ---- ---- ----
---- ---- ---- ----
---- ---- ---- ----    

11

* இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள்
சிதைந்துபோயின.

திருச்சிற்றம்பலம்