
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

இது ஒரு பழமொழி. வல்லவனுக்குக் கிடைக்கக் கூடிய சிறு துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாகச் சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது இந்தப் பழமொழியின் நேர் பொருள். இப்பொருளை உணர்த்துவதற்கான சூழல்களில் இந்தப் பழமொழி பயன்படுத்தப்படும். இந்தப் பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க. ஒரு மரத்தடியில் சீதை இராமனது மடியில் தலை சாய்ந்திருந்தாள். அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று துடித்தான்.
அவளது மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள். இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில் மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண் துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு பழமொழி ஆயிற்று.