திருக்கழுமலம்

பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
1268.
மடமலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.
3.118.1
1269.
மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.
3.118.2
1270.
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே.
3.118.3
1271.
மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.
3.118.4
1272.
சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
3.118.5
1273.
புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைகள் ஒன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.
3.118.6
1274.
அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.
3.118.7
1275.
ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகரென லாமே.
3.118.8
1276.
அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
3.118.9
1277.
உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.
3.118.10
1278.
கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.
3.118.11
திருச்சிற்றம்பலம்