திருப்பந்தணநல்லூர்

bookmark

பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்

1301.

இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.1

1302.

கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும் மண்ணுளார் விண்ணுளா ரெனவுஞ்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.2

1303.

காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு பூசியோர் வெண்மதி சடைமேற்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லு நால்வேதப்
பாட்டினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.2

1304.

முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்
டுருகினா ராகி உறுதிபோந் துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.4

1305.

பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.5

1306.

ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும் உமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியார் அல்லுநண் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.6

1307.

எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை இருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.7

1308.

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

3.121.8

1309.

சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதியாரே.

3.121.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

3.121.10

1310.

கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தண நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே.

3.121.11

திருச்சிற்றம்பலம்