திருஆலவாய்

பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
498.
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
01
499.
மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
02
500.
மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்
திண்ண கத்திரு ஆலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
03
501.
ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.
04
502.
வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.
05
503.
நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.
06
504.
பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்
தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.
07
505.
அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்
பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.
08
506.
மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு வுள்ளமே.
09
507.
கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
10
508.
செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே
11
திருச்சிற்றம்பலம்