திருவேதவனம் - திருவிராகம்

பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
814.
கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர்புவிமேல்
மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை
விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே.
3.76.1
815.
பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.
3.76.2
816.
காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே.
3.76.3
817.
நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்
ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே.
3.76.4
818.
கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
3.76.5
819.
மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்
சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே.
3.76.6
820.
வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்
கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.
3.76.7
821.
முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.
3.76.8
822.
வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.
3.76.9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3.76.10
823.
மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்
சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே.
3.76.11
வேதவனம் என்பது வேதாரணியம்.
திருச்சிற்றம்பலம்