ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்

தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண
சந்த்ரன்நிகர் முகசூ னியம்!
சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்
தரும்பெரிய நகர்சூ னியம்!
மேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே
மிக்கதே சச்சூ னியம்!
மிக்கசற் புத்திரன் இலாததே நலமான
வீறுசேர் கிருகசூ னியம்!
சோம்பாத தலைவரில் லாததே வளமுடன்
சொல்லுயர் சபாசூ னியம்!
தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே
சுத்தசூ னியமென் பர்காண்!
ஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------