மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்
பிழைபுறம் சொலும்மூ டரும்,
பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
பிதற்றிடும் பெருமூ டரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான
பழிதொழில்செய் திடுமூ டரும்,
பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்
பரிதவித் திடுமூ டரும்,
கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது
காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,
கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்
கால்மூடர் அரைமூ டர்காண்
அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------