இழிவு

bookmark

இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை 
      என்னுமவன் அவனின் ஈனன் 
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத் 
      திடும்மூடன் அவனில் ஈனன்! 
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி 
      உதவிடான் அவனில் ஈனன்! 
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும் 
      உலுத்தனோ அவனில் ஈனன்! 
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப் 
      பலகால் அலைந்து திரியப் 
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே 
      பாரில்எல் லோர்க்கும் ஈனன்! 
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர் 
      அமுதனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
----------