உடன் பிறப்பு

bookmark

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர் 
      கொள்சுகம் தம்சு கமெனக் 
கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள் 
      அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத், 
தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம் 
      தீதில்அவர் தவமாம் எனச் 
சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச் 
      சீறரவம் மணிவாய் தொறும் 
கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும் 
      கொள்கைபோல் பிரிவின் றியே 
கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக் 
      கூறுவது வேத ருமமாம்; 
ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே! 
      அண்ணல்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------