திருவாரூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

986

வேம்பினைப் பேசி விடக்கினை

யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்

துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்

அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்

தொண்டுபட் டுய்ம்மின்களே.

4.103.1

987

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்

ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி

உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்

அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை

நீணா டறியுமன்றே.

4.103.2

988

பூம்படி மக்கலம் பொற்படி

மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்

ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ

ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து

தொழுதுய் மடநெஞ்சமே.

4.103.3

989

துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்

துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்

பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்

பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்

ஆரூர் அமுதினுக்கே.

4.103.4

990

கரும்பு பிடித்தவர் காயப்பட்

டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்

பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி

ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று

நானுன்னை வேண்டுவனே.

4.103.5

991

கொடிகொள் விதானங் கவரி

பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்

எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின

ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு

நந்தி புறப்படிலே.

4.103.6

இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.

4.103.7-8

992

சங்கொலிப் பித்திடு மின்சிறு

காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்

காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு

திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா

மரையென்னை ஆண்டனவே.

4.103.10

திருச்சிற்றம்பலம்