திருக்கடவூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1016

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த

மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்

எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்

பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.1

1017

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்

தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்

உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு

திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.2

1018

கரப்புறு சிந்தையர் காண்டற்

கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்

கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்

காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.3

1019

மறித்திகழ் கையினன் வானவர்

கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்

கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்

காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.4

1020

குழைத்திகழ் காதினன் வானவர்

கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்

ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்

காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.5

1021

பாலனுக் காயன்று பாற்கடல்

ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண

மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு

தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட

வூருறை உத்தமனே.

4.108.6

1022

படர்சடைக் கொன்றையும் பன்னக

மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன்

உண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்

காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.7

1023

வெண்டலை மாலையுங் கங்கைக்

கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந்

தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக்

காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட

வூருறை உத்தமனே.

4.108.8

1024

கேழல தாகிக் கிளறிய

கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்

திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்

காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட

வூருறை உத்தமனே.

4.108.9

1025

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள

மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்

பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி

பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட

வூருறை உத்தமனே.

4.108.10

திருச்சிற்றம்பலம்