கோயில் - திருநேரிசை

bookmark

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

218

செஞ்சடைக் கற்றை முற்றத்

திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்

காணலா நறவ நாறும்
மஞ்சடைச் சோலைத் தில்லை

மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்

துளங்கெரி யாடு மாறே.

4.22.1

219

ஏறனார் ஏறு தம்பால்

இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி

ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை

நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று

நீண்டெரி யாடு மாறே.

4.22.2

220

சடையனார் சாந்த நீற்றர்

தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்

உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று

வனலெரி யாடு மாறே.

4.22.3

221

பையர வசைத்த அல்குற்

பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும்

மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட்

டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று

கனலெரி யாடு மாறே.

4.22.4

222

ஓதினார் வேதம் வாயால்

ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப்

புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்

நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்

கனலெரி யாடு மாறே.

4.22.5

223

ஓருடம் பிருவ ராகி

ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்

பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று

பிறங்கெரி யாடு மாறே.

4.22.6

224

முதற்றனிச் சடையை மூழ்க

முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த

மைந்தரைக் காண லாகும்
மதத்துவண் டறையுஞ் சோலை

மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக்

கனலெரி யாடு மாறே.

4.22.7

225

மறையனார் மழுவொன் றேந்தி

மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்

டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று

வனலெரி யாடு மாறே.

4.22.8

226

விருத்தனாய்ப் பால னாகி

விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய

நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட்

கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ

டனலெரி யாடு மாறே.

4.22.9

227

பாலனாய் விருத்த னாகிப்

பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த

கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள்

நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்

நீண்டெரி யாடு மாறே.

4.22.10

228

மதியிலா அரக்க னோடி

மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி

நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்

மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று

வனலெரி யாடு மாறே.

4.22.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்