திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

259

நம்பனே எங்கள் கோவே

நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி

என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே

திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.1

260

பொய்யினால் மிடைந்த போர்வை

புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன்

வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன

சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.2

261

நீதியால் வாழ மாட்டேன்

நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்

உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்

தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.3

262

தெருளுமா தெருள மாட்டேன்

தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்

போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின்

இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.4

263

அஞ்சினால் இயற்றப் பட்ட

ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்

குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங்

காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.5

264

உறுகயி றூசல் போல

ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல

வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப்

பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.6

265

கழித்திலேன் காம வெந்நோய்

காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி

உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற

வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.7

266

மன்றத்துப் புன்னை போல

மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்

உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து

கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.8

267

பிணிவிடா ஆக்கை பெற்றேன்

பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்

பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்

தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.9

268

திருவினாள் கொழுந னாருந்

திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்

இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே

உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.26.10

திருச்சிற்றம்பலம்