திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

269

மடக்கினார் புலியின் தோலை

மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்

மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்

துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.1

270

சூடினார் கங்கை யாளைச்

சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும்

ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்

பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.2

271

கொம்பினார் குழைத்த வேனற்

கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா

வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும்

வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.3

272

மறிபடக் கிடந்த கையர்

வளரிள மங்கை பாகஞ்
செறிபடக் கிடந்த செக்கர்ச்

செழுமதிக் கொழுந்து சூடி
பொறிபடக் கிடந்த நாகம்

புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங்

கெடிலவீ ரட்ட னாரே.

4.27.4

273

நரிவரால் கவ்வச் சென்று

நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை

தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளுந் தெண்ணீணர்க்

கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.5

274

புள்ளலைத் துண்ட ஓட்டில்

உண்டுபோய் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ

றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத்

தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.6

275

நீறிட்ட நுதலர் வேலை

நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக்

கூறினார் ஆறும் நான்குங்
கீறிட்ட திங்கள் சூடிக்

கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.7

276

காணிலார் கருத்தில் வாரார்

திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார்

பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலார் ஐவ ரோடும்

இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

4.27.9

277

தீர்த்தமா மலையை நோக்கிச்

செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப்

பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ்

சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.27.10

திருச்சிற்றம்பலம்