திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

284

ஊனினுள் ளுயிரை வாட்டி

யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்

அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு

ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.1

285

நொய்யவர் விழுமி யாரும்

நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்

உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி

நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.2

286

வெள்ளியர் கரியர் செய்யர்

விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி

யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்

பஞ்சமம் பாடி யாடுந்
தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.3

287

தந்தையுந் தாயு மாகித்

தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி

முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்

கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.4

288

ஆறுடைச் சடையர் போலும்

அன்பருக் கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங்

கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்

நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.5

289

ஞாலமும் அறிய வேண்டின்

நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான

கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச்

செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.6

290

புரிகாலே நேசஞ் செய்ய

இருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி

இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி

தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.7

291

காருடைக் கொன்றை மாலை

கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த

நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும்

பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.8

292

ஓவாத மறைவல் லானும்

ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்

முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற்

றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்றுந்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.9

293

அங்கங்க ளாறு நான்கும்

அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ்

சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர

அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந்

திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்