திருக்கழிப்பாலை - திரு நேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

294

நங்கையைப் பாகம் வைத்தார்

ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்

ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்

தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.1

295

விண்ணினை விரும்ப வைத்தார்

வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்

பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட

மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.2

296

வாமனை வணங்க வைத்தார்

வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார்

சோதியுட் சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார்

அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.3

297

அரியன அங்கம் வேதம்

அந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்

பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப்

பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.4

298

கூரிருள் கிழிய நின்ற

கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு

பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்

அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.5

299

உட்டங்கு சிந்தை வைத்தார்

உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்

வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்

ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.6

300

ஊனப்பே ரொழிய வைத்தார்

ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்

ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார்

வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே

4.30.7

301

கொங்கினும் அரும்பு வைத்தார்

கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்

சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்

ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.8

302

சதுர்முகன் தானும் மாலுந்

தம்மிலே இகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற

எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக்

கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.9

303

மாலினாள் நங்கை அஞ்ச

மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடுக்கக்

காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு

நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினால் ஊன்றி யிட்டார்

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

4.30.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.

திருச்சிற்றம்பலம்