திருப்பயற்றூர் - திரு நேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

314

உரித்திட்டார் ஆனை யின்றோள்

உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி

விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது

தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்

திருப்பயற் றூர னாரே.

4.32.1

315

உவந்திட்டங் குமையோர் பாகம்

வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்

மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்

கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்

திருப்பயற் றூர னாரே.

4.32.2

316

நங்களுக் கருள தென்று

நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள்

தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன

நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்

திருப்பயற் றூர னாரே.

4.32.3

317

பார்த்தனுக் கருளும் வைத்தார்

பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்

சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்

கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்

திருப்பயற் றூர னாரே.

4.32.4

318

மூவகை மூவர் போலும்

முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும்

நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்

ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந்

திருப்பயற் றூர னாரே.

4.32.5

319

ஞாயிறாய் நமனு மாகி

வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்

திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்

பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்

திருப்பயற் றூர னாரே.

4.32.6

320

ஆவியாய் அவியு மாகி

அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்

பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்

கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்

திருப்பயற் றூர னாரே.

4.32.7

321

தந்தையாய்த் தாயு மாகித்

தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற

ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்

றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்

திருப்பயற் றூர னாரே.

4.32.8

322

புலன்களைப் போக நீக்கிப்

புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று

இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார்

மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்

திருப்பயற் றூர னாரே.

4.32.9

323

மூர்த்திதன் மலையின் மீது

போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்

பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்

அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்

திருப்பயற் றூர னாரே.

4.32.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.


திருச்சிற்றம்பலம்