திருமறைக்காடு - திரு நேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

334

தேரையு மேல்க டாவித்

திண்ணமாத் தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா

ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப்

பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார்

கலிமறைக் காட னாரே.

4.33.1

335

முக்கிமுன் வெகுண்டெ டுத்த

முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி

நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட

அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந்

திருமறைக் காட னாரே.

4.33.2

336

மிகப்பெருத் துலாவ மிக்கா

னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும்

ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை

ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர்

நான்மறைக் காடு தானே.

4.33.3

337

அந்தரந் தேர்க டாவி

யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை

ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும்

வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்

திருமறைக் காட னாரே.

4.33.4

338

தடுக்கவுந் தாங்க வொண்ணாத்

தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக்

கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட

மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம்

அணிமறைக் காடு தானே.

4.33.5

339

நாண்முடிக் கின்ற சீரான்

நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான்

கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும்

நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்

தொன்மறைக் காட னாரே.

4.33.6

340

பத்துவாய் இரட்டிக் கைக

ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த

பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று

கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும்

முதுமறைக் காட னாரே.

4.33.7

341

பக்கமே விட்ட கையான்

பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப்

போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு

வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம்

நான்மறைக் காட னாரே.

4.33.8

342

நாணஞ்சு கைய னாகி

நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த

பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா

நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார்

எழில்மறைக் காட னாரே.

4.33.9

343

கங்கைநீர் சடையுள் வைக்கக்

காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச்

சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி

முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர்

அணிமறைக் காடு தானே.

4.33.10

திருச்சிற்றம்பலம்