திருவிடைமருது - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

344

காடுடைச் சுடலை நீற்றர்

கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்

பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு

சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி

இடைமரு திடங்கொண் டாரே.

4.34.1

345

முந்தையார் முந்தி யுள்ளார்

மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்

தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்

சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.2

346

காருடைக் கொன்றை மாலை

கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த

நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற

வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கும்

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.3

347

விண்ணினார் விண்ணின் மிக்கார்

வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க

பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க

நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.4

348

வேதங்கள் நான்குங் கொண்டு

விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட

லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற

பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.5

349

பொறியர வரையி லார்த்துப்

பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை

முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க

வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.6

350

படரொளி சடையி னுள்ளாற்

பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்

தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற

வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.7

351

கமழ்தரு சடையி னுள்ளாற்

கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்

தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி

மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.8

352

பொன்றிகழ் கொன்றை மாலை

புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து

மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா

அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.9

353

மலையுடன் விரவி நின்று

மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே

தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித்

திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி

இடைமரு திடங் கொண்டாரே.

4.34.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்