திருப்பழனம் - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்
354
ஆடினா ரொருவர் போலு
மலர்கமழ் குழலி னாலைக்
கூடினா ரொருவர் போலுங்
குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்
தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்
பழனத்தெம் பரம னாரே.
4.35.1
355
போவதோர் நெறியு மானார்
புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு
வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்
குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.2
356
கண்டராய் முண்ட ராகிக்
கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்
தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த
வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.3
357
நீரவன் தீயி னோடு
நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க
பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க
திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.4
358
ஊழியா ரூழி தோறும்
உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்
பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்
அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்
பழனத்தெம் பரம னாரே.
4.35.5
359
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா
நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.6
360
ஆதித்தன் அங்கி சோமன்
அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்
போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்
சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.7
361
காற்றனாற் காலற் காய்ந்து
காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத்
தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்
இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்
பழனத்தெம் பரம னாரே.
4.35.8
362
கண்ணனும் பிரம னோடு
காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த
எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி
வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்
பழனத்தெம் பரம னாரே.
4.35.9
363
குடையுடை அரக்கன் சென்று
குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச
எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்
விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்
பழனத்தெம் பரம னாரே.
4.35.10
திருச்சிற்றம்பலம்