திருப்பழனம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

354

ஆடினா ரொருவர் போலு

மலர்கமழ் குழலி னாலைக்
கூடினா ரொருவர் போலுங்

குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்

தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்

பழனத்தெம் பரம னாரே.

4.35.1

355

போவதோர் நெறியு மானார்

புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு

வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்

குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.2

356

கண்டராய் முண்ட ராகிக்

கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்

தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த

வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.3

357

நீரவன் தீயி னோடு

நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க

பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க

திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.4

358

ஊழியா ரூழி தோறும்

உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்

பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்

அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்

பழனத்தெம் பரம னாரே.

4.35.5

359

ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்

அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா

நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக்

கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.6

360

ஆதித்தன் அங்கி சோமன்

அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்

போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்

சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.7

361

காற்றனாற் காலற் காய்ந்து

காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத்

தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்

இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்

பழனத்தெம் பரம னாரே.

4.35.8

362

கண்ணனும் பிரம னோடு

காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த

எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி

வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்

பழனத்தெம் பரம னாரே.

4.35.9

363

குடையுடை அரக்கன் சென்று

குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச

எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்

விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்

பழனத்தெம் பரம னாரே.

4.35.10

திருச்சிற்றம்பலம்