திருநெய்த்தானம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

364

காலனை வீழச் செற்ற

கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்

மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்

குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட

நினைக்குமா நினைக்கின் றேனே.

4.37.1

365

காமனை யன்று கண்ணாற்

கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித்

தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்

செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்

வாழ்வுற நினைந்த வாறே.

4.37.2

366

பிறைதரு சடையின் மேலே

பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்

உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக்

குழகனைக் கூட லாமே.

4.37.3

367

வடிதரு மழுவொன் றேந்தி

வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே

புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப

ஆடுமெம் அண்ண லாரே.

4.37.4

368

காடிட மாக நின்று

கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்

பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்

அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக்

கூடுமா றறிகி லேனே.

4.37.5

369

வானவர் வணங்கி யேத்தி

வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும்

சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்

திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக்

கூடுமா றறிகி லேனே.

4.37.6

370

காலதிற் கழல்க ளார்ப்பக்

கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று

நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய

விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக

மகிழ்ந்தநெய்த் தான னாரே.

4.37.7

371

பந்தித்த சடையின் மேலே

பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி

அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று

வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்

திருந்துநெய்த் தான னாரே.

4.37.8

372

சோதியாய்ச் சுடரு மானார்

சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த

உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்

யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி

நின்றநெய்த் தான னாரே.

4.37.9

373

இலையுடைப் படைகை யேந்தும்

இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே

தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்

திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும்

நின்றநெய்த் தான னாரே.

4.37.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்