திருவையாறு - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

374

கங்கையைச் சடையுள் வைத்தார்

கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்

திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்

மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.1

375

பொடிதனைப் பூச வைத்தார்

பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்

காலனைக் காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை

மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.2

376

உடைதரு கீளும் வைத்தார்

உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்

பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்

வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.3

377

தொண்டர்கள் தொழவும் வைத்தார்

தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்

எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை

மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்

ஐயனை யாற னாரே.

4.38.4

378

வானவர் வணங்க வைத்தார்

வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்

காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்

ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.5

379

சங்கணி குழையும் வைத்தார்

சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்

விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்

கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.6

380

பத்தர்கட் கருளும் வைத்தார்

பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்

சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்

முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.7

381

ஏறுகந் தேற வைத்தார்

இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்

நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார்

கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.8

382

பூதங்கள் பலவும் வைத்தார்

பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்

கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்

பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.9

383

இரப்பவர்க் கீய வைத்தார்

ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்

கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்

படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்

ஐயனை யாற னாரே.

4.38.10

திருச்சிற்றம்பலம்