திருவையாறு - திருநேரிசை

bookmark

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

384

குண்டனாய்ச் சமண ரோடே

கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ

தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே

திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்

சொல்லிநான் திரிகின் றேனே.

4.39.1

385

பீலிகை இடுக்கி நாளும்

பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல

மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந்

திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்

அழகிதா எழுந்த வாறே.

4.39.2

386

தட்டிடு சமண ரோடே

தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே

உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்

திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே

உம்மைநான் உகந்திட் டேனே.

4.39.3

387

பாசிப்பல் மாசு மெய்யர்

பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை

நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்

திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்

வல்வினை மாயு மன்றே.

4.39.4

388

கடுப்பொடி யட்டி மெய்யிற்

கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே

மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்

திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே

அருந்தவஞ் செய்த வாறே.

4.39.5

389

துறவியென் றவம தோரேன்

சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்

உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த

திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்

மதியுனக் கடைந்த வாறே.

4.39.6

390

பல்லுரைச் சமண ரோடே

பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்

சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்

திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்

நினைந்தபோ தினிய வாறே.

4.39.7

391

மண்ணுளார் விண்ணு ளாரும்

வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே

இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்

திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக்

கருதிற்றே முடிந்த வாறே.

4.39.8

392

குருந்தம தொசித்த மாலுங்

குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந்

திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்

திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே

பொய்வினை மாயு மன்றே.

4.39.9

393

அறிவிலா அரக்க னோடி

அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு

மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்

நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்

திருவையா றமர்ந்த தேனே.

4.39.10

திருச்சிற்றம்பலம்