திருவையாறு - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

394

தானலா துலக மில்லை

சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை

கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை

வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.40.1

395

ஆலலால் இருக்கை இல்லை

அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை

நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி

மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.40.2

396

நரிபுரி சுடலை தன்னில்

நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்

துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்

தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்

ஐயனை யாற னார்க்கே.

4.40.3

397

தொண்டலாற் றுணையு மில்லை

தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை

கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்

பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்

ஐயனை யாற னார்க்கே.

4.40.4

398

எரியலா லுருவ மில்லை

ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை

காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்

பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.40.5

399

என்பலாற் கலனு மில்லை

எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்

பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்

தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.406

400

கீளலால் உடையு மில்லை

கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை

தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட

வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.40.7

401

சகமலா தடிமை யில்லை

தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்

நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க

முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை

ஐயனை யாற னார்க்கே.

4.40.8

402

உமையலா துருவ மில்லை

உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்

நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்

கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்

ஐயனை யாற னார்க்கே.

4.40.9

403

மலையலா லிருக்கை யில்லை

மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை

தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ

நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்

ஐயனை யாற னார்க்கே.

4.40.10

திருச்சிற்றம்பலம்