திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை

bookmark

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

424

மறையது பாடிப் பிச்சைக்

கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற்

பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.1

425

மாலன மாயன் றன்னை

மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்

பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை

இலங்குமேற் றளிய னாரே.

4.43.2

426

விண்ணிடை விண்ண வர்கள்

விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க

கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.3

427

சோமனை அரவி னோடு

சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள்

வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை

இலங்குமேற் றளிய னாரே.

4.43.4

428

ஊனவ ருயிரி னோடு

முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித்

தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டார்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.5

429

மாயனாய் மால னாகி

மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித்

தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.6

430

மண்ணினை யுண்ட மாயன்

தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும்

பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.7

431

செல்வியைப் பாகங் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு

மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.8

432

வேறிணை யின்றி யென்றும்

விளங்கொளி மருங்கி னாளைக்
கூறிய லாக வைத்தார்

கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்

அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை

இலங்குமேற் றளிய னாரே.

4.43.9

433

தென்னவன் மலையெ டுக்கச்

சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற

மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக்

கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார்

இலங்குமேற் றளிய னாரே.

4.43.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.

திருச்சிற்றம்பலம்