திருஏகம்பம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

434

நம்பனை நகர மூன்றும்

எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை

அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட்

செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்

சிந்தியா எழுகின் றேனே.

4.44.1

435

ஒருமுழம் உள்ள குட்டம்

ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்

அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்

கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக்

கச்சியே கம்ப னீரே.

4.44.2

436

மலையினார் மகளோர் பாக

மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந்

தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி

ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்

தலைவர்க்குந் தலைவர் தாமே.

4.44.3

437

பூத்தபொற் கொன்றை மாலை

புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்

திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற

ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்

மால்கொடு மயங்கி னேனே.

4.44.4

438

மையினார் மலர்நெ டுங்கண்

மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக்

கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி

ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்

கடுவினை களைய லாமே.

4.44.5

439

தருவினை மருவுங் கங்கை

தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்

அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ்

செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே

உள்ளத்தால் உகக்கின் றேனே.

4.44.6

440

கொண்டதோர் கோல மாகிக்

கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்

உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த

நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான்

கருதியே திரிகின் றேனே.

4.44.7

441

படமுடை அரவி னோடு

பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக்

கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள்

ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண

ஞாலந்தான் உய்ந்த வாறே.

4.44.8

442

பொன்றிகழ் கொன்றை மாலை

பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்

மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக்

குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்

இனியர்ஏ கம்ப னாரே.

4.44.9

443

துருத்தியார் பழனத் துள்ளார்

தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்

அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி

ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்

வல்வினை மாயு மன்றே.

4.44.10

திருச்சிற்றம்பலம்