திருஆப்பாடி - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

466

கடலகம் ஏழி னோடும்

புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும்

ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை

தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி

மன்னும்ஆப் பாடி யாரே.

4.48.1

467

ஆதியும் அறிவு மாகி

அறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித்

தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப்

பரவுவார் பாங்க னாகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல்

விரும்பும்ஆப் பாடி யாரே.

4.48.2

468

எண்ணுடை இருக்கு மாகி

யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப்

பரவுவார் பாங்க னாகிக்
கண்ணொரு நெற்றி யாகிக்

கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப்

பேணும்ஆப் பாடி யாரே.

4.48.3

469

அண்டமார் அமரர் கோமான்

ஆதியெம் அண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே

கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான்

காலற எறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த

தலைவர்ஆப் பாடி யாரே.

4.48.4

470

சிந்தையுந் தெளிவு மாகித்

தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி

வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த

மண்ணித்தென் கரைமேல் மன்னி
அந்தமோ டளவி லாத

அடிகள்ஆப் பாடி யாரே.

4.48.5

471

வன்னிவா ளரவு மத்தம்

மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி

மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக்

கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட

இருந்தஆப் பாடி யாரே.

4.48.6

472

உள்ளுமாய்ப் புறமு மாகி

உருவுமாய் அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி

விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்

கருத்துமாய் அருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட்

டிருந்தஆப் பாடி யாரே.

4.48.7

473

மயக்கமாய்த் தெளிவு மாகி

மால்வரை வளியு மாகித்
தியக்கமாய் ஒருக்க மாகிச்

சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதி யாகி

எண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமாய் அடக்க மாய

ஐவர்ஆப் பாடி யாரே.

4.48.8

474

ஆரழல் உருவ மாகி

அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உருவி னானைப்

பிரமனும் மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச்

சென்றடி வணங்கு வார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார்

பேணும்ஆப் பாடி யாரே.

4.48.9

475

திண்டிறல் அரக்க னோடிச்

சீகயி லாயந் தன்னை
எண்டிறல் இலனு மாகி

எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டிறல் நெறிய வூன்றி

மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட்டு கந்த

பரமர்ஆப் பாடி யாரே.

4.48.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்