திருக்குறுக்கை - திருநேரிசை

bookmark

476

ஆதியிற் பிரம னார்தாம்

அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்

உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்

சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.1

477

நீற்றினை நிறையப் பூசி

நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்

அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று

தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.2

478

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்

தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்

கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்

பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.3

479

சிலந்தியும் ஆனைக் காவிற்

திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே

கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ்

சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.4

480

ஏறுடன் ஏழ டர்த்தான்

எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை

அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய

மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.5

481

கல்லினால் எறிந்து கஞ்சி

தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே

நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி

எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.6

482

காப்பதோர் வில்லும் அம்புங்

கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்

தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்

குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.7

483

நிறைமறைக் காடு தன்னில்

நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச்

சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்

நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.8

484

அணங்குமை பாக மாக

அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்

மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து

காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.9

485

எடுத்தனன் எழிற் கயிலை

இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற

அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால்

வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.49.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்