திருவாரூர் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

508

குழல்வலங் கொண்ட சொல்லாள்

கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்

கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்

அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்

தோன்றினார் தோன்றி னாரே.

4.53.1

509

நாகத்தை நங்கை அஞ்ச

நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்

வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்

திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்

அடங்கும்ஆ ரூர னார்க்கே.

4.53.2

510

தொழுதகங் குழைய மேவித்

தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்

அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த

மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்

புதுமுகிழ் சூடி னாரே.

4.53.3

511

நஞ்சிருள் மணிகொள் கண்டர்

நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி

விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி

வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்

அணியும்ஆ ரூர னாரே.

4.53.4

512

எந்தளிர் நீர்மை கோல

மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன

படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்

தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்

வடிவர்ஆ ரூர னாரே.

4.53.5

513

வானகம் விளங்க மல்கும்

வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து

தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்

உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்

அடிகள்ஆ ரூர னாரே.

4.53.6

514

அஞ்சணை கணையி னானை

அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை

அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி

ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்

ஆதரித் திடங்கொண் டாரே.

4.53.7

515

வணங்கிமுன் அமரர் ஏத்த

வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த

பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்

மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி

ஆரூரெம் அடிக ளாரே.

4.53.8

516

நகலிடம் பிறர்கட் காக

நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்

புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்

கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த

அடிகள்ஆ ரூர னாரே.

4.53.9

517

ஆயிரந் திங்கள் மொய்த்த

அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்

அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்

தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த

அடிகள்ஆ ரூர னாரே.

4.53.10

திருச்சிற்றம்பலம்